Thursday, November 23, 2017

அரசியல் ஆயுதமான ஒப்பரேஷன் கிளீன் மணி

    
 சசிகலாவின் குடும்பம்
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் குடும்பத்தினர்,  உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளிலும்  அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பெரும் எடுப்பிலான சோதனையை நடத்தியுள்ளனர். தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் சுமார் 190 இடங்களில்  2000  அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரியவருகிறது. இது போன்ற மிகப்பெரியதொரு சோதனை இந்தியாவிலேயே இதுவரை நடைபெறவில்லை. திருமணத்துக்குச் செல்வதற்காக 200 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.  
ஜெயா தொலைக்காட்சி அலுவலகம்,மிடாஸ் மதுபான ஆலை,  கொடநாடு,சிறுதாவூர் பங்களா  உட்பட பல அலுவலகங்களில் தீவிர சோதனைநடைபெற்றது.மகாதேவன்,விவேக்,கிருஷ்ணப்பிரியா,வெங்கடேசன்,திவாகரன்,விவேகானந்தன்,டாக்டர்வெங்கடேசன்,டாக்டர்சிவகுமார்,கலியப்பெருமாள் பாஸ்கரன்,பரணி கார்த்திக் , புகழேந்தி உட்பட பலரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டுத் தேடினர்.
மன்னார்குடியைச் சேர்ந்த சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்த சசிகலா,  அரசியல்வாதியான நடராஜனைத் திருமணம் செய்தார். கணவருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்த சசிகலா, வீடியோ  கடை ஒன்றை நடத்தினார். நடராஜனின் அரசியல் தொடர்புகளினால் அரசியல் கட்சிகளின்  கூட்டங்களை வீடியோ எடுக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.  ஜெயலலிதாவுடனான நெருக்கம் உடன் பிறவா சகோதரிவரை வளர்ந்தது. தனி ஆளான ஜெயலலிதாவின் பக்கத்துணையாக சசிகலா இருந்தார்.  சசிகலா என்ற ஒற்றைப் பெண்மணியின் பின்னால் அவருடைய மன்னர் குடி குடும்பம் பெரு வளர்ச்சி பெற்றது. 
 
 
சினிமாவிலும் அரசியலிலும் ஜெயலலிதா சம்பாதித்தற்கு மிக அதிகமான சொத்துக்களுக்கு அதிபதியானது மன்னார்குடி  குடும்பம் ஜெயலலிதாவின் சொத்துக்களில் அதிகமானவை பினாமியின் பெயரிலேயே உள்ளன. வருமானம் தரும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என்பனவற்றை மிரட்டிப்பறிப்பதில் சசிகலாவின் உறவினர்கள் தேர்ச்சி பெற்றனர்.பரம்பரை பரம்பரையாக தொழில் செய்பவர்களின் சொத்தை விட அதிகமான சொத்துக்களை மன்னார்குடி இளவல்கள் கொண்டிருந்தனர். இவற்றை எல்லாம் களம் தாழ்த்தித் தெரிந்துகொண்டதால்  சசிகலாவுடன் மன்னார்குடி குடும்பத்தை விரட்டினார் ஜெயலலிதா. பின்னர் சசிகலாவை மட்டும் மன்னித்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.  அந்த மன்னிப்புத்தான் அவருக்கு எதிரானதாக மாறியது.
வருமானவரி அதிகாரிகளின் சோதனையின் போது 1௦௦௦ கோடிக்கும் அதிகமான முறைகேடுகள், போலி நிறுவனங்கள், போலியான் கணக்கு வழக்குகள் என்பன தெரியவந்துள்ளது. வள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் யாராவது  செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. வைரங்கள், அனுமதிப் பத்திரம் இல்லாத துப்பாக்கிகள் , நகைகள்,   முக்கியமான ஆவணங்கள் அன்பான கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதனையும் உறுதி செய்யவில்லை. ஜெயலலிதாவின் வீட்டில் நள்ளிரவு  சோதனை நடத்தப்பட்டது. சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என செய்திகள்வெளியாகி உள்ளன. முக்கியமான பல ஆவணங்கள் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டு விட்டதாகவும், அவற்றைத் தேடி வருமானவரித்துறை அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச்  செல்லப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 விவேக்

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதனை எதிர்த்து சிலர் கோஷம் போட்டார்கள். தினகரன்,திவாகரன்,விவேக் ஆகியோர் மிரட்டலான பாணியில் பேட்டியளித்தார்கள்.  இந்தச்சோதனை அரசியல்  பழிவாங்கல் என தினகரனும் திவகரனும் அறிவித்தனர். அதிகாரிகள் தமது கடமையைச்செய்தார்கள் என்று விவேக் தெரிவித்தார்.  சசிகலாவை முழுமையாகப்  பாவித்துவித்த ஜெயலலிதா, அவரைக்கைவிட்டு விட்டார் என திவாகரன் குற்றம் சாட்டுகிறார். அதனை தினகரன் மறுக்கிறார். எனது வீட்டில் சோதனை  நடைபெறவில்லை. எனது நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது எனக் கூறி தினகரன் தப்பிக்கிறார். ஜெயலலிதாவின் மருத்துவ சிடியை சில இடங்களில் அதிகாரிகள் விசாரித்ததாக திவாகரன் குற்றம் சாட்டுகிறார்.  அதனை புகழேந்தி மறுக்கிறார். மன்னார்குடிக் குடும்பத்தில் உள்ள சில பிரச்சினைகள் சந்திக்கு வந்துள்ளன.
தமிழக  அரசைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துவதற்கு மத்தியில் ஆட்சிசெய்யும் பாரதீய ஜனதா விரும்புகிறது. தினகரன் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். அவரை  அடக்குவதற்காகவே இதன் ஒப்பரேஷன் என சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். இதே போன்ற அதிரடிச்சோதனைகள் முன்னரும் தமிழகத்தில் நடைபெற்றன. அந்த விசாரணைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 கிருஷ்ணகுமாரி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது 570 கோடி ரூபாவுடன் கைப்பற்றப்பட்ட கொன்டனர்களின் விசாரணை, 89 கோடி ரூபா வழங்கிய ஆவணம்,  நந்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, முன்னாள் தலைமைச்செயலாளர் ரம் மோகன் ராம்,மணல் மாபியா சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர்,குட்கா குடோன் ஆகிய இடங்களில் சோதனை செய்து பணம்,நகை, ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. அந்த விசாரணைகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் மூடு மந்திரமாக உள்ளன. தினகரன் தரப்பு அடங்கிவிட்டால் இந்த விசாரணைகள் எல்லாம் மூடி மறைக்கப்படும்.


  

No comments: