Sunday, August 27, 2017

கட்சிக்கு உரிமை கோரும் தலைவர்கள் நடுத்தெருவில் தொண்டர்கள்

தமிழக அரசியலில் யாராலும்  அசைக்கக் முடியாதா கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தைத்  தனது ஆயுள் உள்ளவரை எதிர்க் கட்சியாக வைத்திருந்த எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று மூன்று துண்டாக சிதறிப்போய் இருக்கிறது. கட்சிக்கும் ஆட்சிக்கும் உரிமை கோரி நிர்வாகிகள் போராட்டம் நடத்துகின்றனர். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தொண்டர்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர்.  

சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டு சசிகலாவால் அரவணைக்கப்பட்ட தினகரன் ஆகிய மூவரின் தலைமையில் கழகம் துண்டுபட்டுள்ளது. இவர்களின் பதவிப் போட்டியால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் சின்னமாகிய   இரட்டை இலையும் முடக்கப்பட்டுள்ளது.

இரட்டை  இலை இல்லை என்றால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்பது யதார்த்தம். தமிழக அரசு பிரிவுபட்டு நிற்கிறது. மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்யாது பதவிக்காகத் தலைவர்கள் அடிபடுகிறார்கள், அமைச்சரும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பதற்காக இலஞ்சம் பெறுகின்றனர், நீட் தேர்வால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது இந்த நிலையில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு தமிழக அரசைக் காப்பாற்ற  வியூகம் வகுக்கிறது.
ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என தர்ம யுத்தம் நடத்திய பன்னீர், தனது எதிரியான எடப்படியுடன் கைகோர்த்துள்ளார்.  தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தா சாகர் ராவ் பிரிந்திருந்த தலைவர்களின் கைகளைப்   பிடித்து இணைத்திருக்கிறார். அடுத்த நிமிடம் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவிக்கிறார். பிரிந்திருந்தவர்கள் இணைந்ததில் எனது பங்களிப்பு எதுவும் இல்லை என மத்திய அரசு கூறுகிறது. அதனை நம்ப யாரும் தயாராக இல்லை.கட்சியில் இருந்த சகோதரர்கள் சிலகாலம் பிரிந்திருந்து மீண்டும் இணைந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த இணைப்பு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஏதோ ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு கட்சிகள் இணைந்திருப்பது என்பதே உண்மை.

ஜெயலலிதாவின் மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சிபிஐ விசாரணை வேண்டும், சசிகலாவைக் கட்சியில் இருந்து வெளியேற்ற   வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை ஜெயலலிதாவின் மரணத்துக்குரிய காரணத்தைக் கண்டறிய விசாரணைக் கமிஷன் மைக்கப்படும் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியில் இருந்து தூக்கி ஏறிய நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி உத்தரவாதம் கொடுத்துள்ளார். பன்னீரைத் திருப்திப்படுத்த துணை முதல்வர்பதவி  உருவாக்கப்பட்டுள்ளது. பன்னீரின் அணியைச்சேர்ந்த மஃபாண்டியராஜனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியை எதிர்க்கும் தினகரனின் ஆதரவாளர்களிடம் இருந்த கூடுதல் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பதவிகளை எதிர்பர்க்காது  இணைந்திருந்தால் அது நியாயமான இணைப்பாக இருந்திருக்கும்.

எடப்படியும்  பன்னீரும் இனைந்ததை விரும்பாத தினகரன் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். தனக்கு ஆ தரவான 19 சட்டசபை உறுப்பினர்களை  ஓரிடத்தில் சகல வசதிகளையும் கொடுத்து தங்க வைத்துள்ளார். அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியுட்டு வெற்றிபெற்ற சிறுகட்சிகளின் தலைவர்களான தமீம் அன்சாரி,தனியரசு,கருணாஸ் ஆகியோரும் இந்த இணைப்பை விரும்பவில்லை 19 உறுப்பினர்களுடன் மேலும் இருவர் இணைந்துள்ளனர். இவை எல்லாம்  குதிரை  பேரத்துக்கான முன்னேற்பாடு இதனைத் தடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.

தமிழக முதலமைச்சரான எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என தினகரனின் ஆதரவாளர்களான 19சட்டசபை உறுப்பினர்களும் தனித்தனியாக தமிழக  பொறுப்பு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எடப்படியும் பன்னீரும் இனைந்தாலும் அறுதிப்பெரும்பன்மையை தமிழக அரசு இழந்துவிட்டது.  அறுதிப்பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை இப்போது 113 பேர் மட்டுமே உள்ளனர். நம்பிக்கை  இல்லாப்பிரேரணைக்கு உத்தரவிடக்கோரி திராவிட முன்னேற்றக் கழகமும் ஆளுனருக்குக்  கடிதம் அனுப்பி உள்ளது. தமிழகம் வந்திருக்கும் ஆளுனர் என்ன்ன செய்யப்போகிறார் என்பதை அனைவரும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக எடப்படியும் பன்னீரும் பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து சதி செய்யும் என  தமிழக அரசியல்வாதிகள் நம்புகின்றனர். தமிழக அரசைக் காப்பாற்றும் நடவடிக்கையை முன்னெடுக்கும் என்பதி எதுவித சந்தேகமும் இல்லை.
சூரன்.ஏ.ரவிவர்மா

 



No comments: