Tuesday, April 12, 2016

தமிழரின் யோசனையை ஏற்குமா சிங்களம்


இலங்கையை காலம் காலமாக ஆண்டுவந்த சிங்கள மேலாதிக்க அரசாங்கங்கள் தமது இருப்பைத் தக்க வைப்பதற்காக தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி சிங்கள மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டின. இதன் உச்சக்கட்டமாக பெளத்த மதத்துக்கு முன்னுரிமை, சிங்களம் மட்டும் சட்டம்,தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், பல்கலைக் கழகத்தில் பயில்வதற்கு இனவிகிதாசார அனுமதி என்பனவற்றை அமுல்படுத்தி சிங்கள மக்களின் மனத்தைக் குளிர்வித்து தமிழ் மக்களை புறக்கணித்தனர்.

தமிழ் மொழிக்கு சம உரிமை என சட்டத்தில் எழுதிவிட்டு சட்டத்தை மதிக்காது சிங்களத்தை முதன்மைப்படுத்திய   தலைவர்களினால் எழில் மிகு இலங்கை பிரச்சினை உருவானது.  புதிய இலங்கையை உருவாக்க திட சங்கற்பம் பூண்டிருக்கும் நல்லிணக்க அரசாங்கம் அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு ஆலோசனையை பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளது.கேட்டுள்ளது.  அரசியல் கட்சிகளும் நிறுவனங்களும், தனி நபர்களும் தமது ஆலோசனையை சமர்ப்பித்தன. வடமாகாண சபையும்   தனது ஆலோசனையை சமர்ப்பித்துள்ளது.  வடமாகாண சபையா தயாரித்துள்ள அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு திட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

வடமாகாண சபையின் 49 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவைக் கட்டடத்தில்   வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு முன்மொழிவுகளை சபையில் முன்வைத்து முதலமைச்சர் உரையாற்றினார்.அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்
வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்படவேண்டும். முஸ்லிம் மக்களுக்கும் தெற்கில் மலையக மக்களுக்கும் தன்னாட்சிப் பிராந்தியம் உருவாக்கப்பட வேண்டும்

இந்தியாவில் மாநிலங்கள் மொழி ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதைப் போன்று இலங்கையானது அடிப்படையில் இரண்டு பரந்த மாநிலங்களாக அதாவது பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் பிரதேசத்தைக் கொண்ட வடக்குஇ கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் மற்றும் பெரும்பான்மையாகச் சிங்களம் பேசும் மக்களைக் கொண்ட ஏனைய ஏழு மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்.

இவ்விரு பரந்த மொழி ரீதியான மாநிலங்களிலும் தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அலகாகவும் தமிழ் பேசும் மலையகத் தமிழர்கள் நாட்டின் ஏனைய பகுதியில் ஓர் அலகாகவும் இனங்காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல்வேண்டும்.
சிங்களம் பேசுவேரைக் கொண்ட மாநிலமானது அதனுள்ளே பிரிக்கப்படல் வேண்டுமா என்ற கேள்வியானது சிங்கள மக்களால் தீர்மானிக்கப்படல் வேண்டும்.
பெரிய நகருக்குரிய கொழும்புப் பகுதியானது தனியானதோர் நிர்வாகத்தைக் கொண்டு நாட்டின் தலைநகர் அலகாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

இலங்கையில் தமிழ் பேசுவோரைக் கொண்டுள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களினுள் தற்போதைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒன்றிணைத்தலின் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபையானது உருவாகும்.
இத்தன்னாட்சிப் பிராந்தியத்தின் நிலை பரிமாணம் மற்றும் நியாயாதிக்க எல்லைகள் ஆகியன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும்.
மொழி ரீதியிலான தமிழ் பேசும் வடகிழக்கு மாநிலமானது மாநிலப் பாராளுமன்றத்தைக் கொண்டிருக்கும்

மலையகத் தமிழர்களுக்காக அதேபோன்ற ஒழுங்குகள் சிங்கள மொழிரீதியான மாநிலத்தினுள் மேற்கொள்ளப்படல்வேண்டும். அதிகாரமானது ஒரு சமூகத்தில் குவிக்கப்படும் அபாயத்தைத் தவிர்த்து அதிகாரங்கள் சகல சமூகங்களுக்கிடையேயும் சமனாகப் பகிரப்படுவதை முழு நாட்டினதும் பாராளுமன்றப் பிரதிநிதிகள் உறுதி செய்தல் வேண்டும்.
எது எவ்வாறு இருப்பினும் வடகிழக்கு மாநிலம் மற்றும் முஸ்லிம் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் மலையகத் தமிழ் தன்னாட்சிப் பிராந்தியம் பாதிக்கத்தக்கவாறு மத்திய கூட்டாட்சி சமஷ்டிப் பராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் உரிய மாநிலத்தாலோ அல்லது தன்னாட்சிப் பிராந்தியங்களாலோ அங்கீகரிக்கப்படாத வரை நடைமுறைக்கு வரக்கூடாது.

வடகிழக்கு மாநிலப் பாராளுமன்றம் வடகிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை அதேபோல் மலையகத் தமிழ்ப் பிராந்திய சபை ஆகியவற்றுக்கு தமது சொந்த அலுவல்களை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் முழுமையாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
இப்பாராளுமன்றத்துக்கும் பிராந்திய சபைகளுக்கும் போதி சுயாட்சியானது ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். இலங்கையை விடப் பரப்பளவிலும் குடித்தொகையிலும் சிறிய நாடாகிய சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள கன்டோன் நாட்டுப் பிரிவு முறைமையானது அவசியமான மாற்றங்களுடன் இங்கு சுவீகாரஞ் செய்வதற்காகப் பரிசீலிக்கப்படமுடியும்.
தமிழ்ப்பேசும் மாநில அரசில் மத்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் நிறைவேற்று அதிகாரம் எவற்றையும் கொண்டிருக்கமாட்டார். அவை மாநிலத்தின் அமைச்சரவையினாலேயே முழுமையாக தன்னுடைமையாக்கப்படும்.

இலங்கையின் அரசகரும மொழிகள் சிங்களமும் தமிழும் ஆவதுடன் ஆங்கிலமானது இணைப்பு மொழியாகவும் இருத்தல் வேண்டும். வடகிழக்கு மாநிலத்திலுள்ள சகல பதிவுகளும் நடவடிக்கைகளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பேணப்பட்டு தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும். மலையகத் தமிழ்ப் பிராந்திய சபை தவிர்ந்த தீவின் மீதிப்பாகத்தில் பேணப்படும்
சகல பதிவுகளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பேணப்பட்டு சிங்களத்தில் இருத்தல் வேண்டும். மலையகப் பிராந்தியத்திய சபைகளில் பேணப்படும் சகல பதிவுகளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் தமிழிலோ சிங்களத்திலோ நடைபெறலாம். அவற்றின் தமிழ் அல்லது சிங்கள மொழிபெயர்ப்பும் ஆங்கிலமொழி பெயர்ப்பும் பேணப்படவேண்டும்.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குகையில் தொடர்ச்சியாக வந்த மத்திய அரசாங்கங்களால் சுற்றயல் நிர்வாகங்களை வலிதற்றதாக்குவதன் பொருட்டு இதுவரை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்படல்வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் தேசிய மொழிகளிலும் இணைப்பு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பதைக் கட்டாயமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அனுமதிக்கப்படவேண்டும்.
குடியரசின் கொடியானது மக்கள் பிரிவுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் இருப்பதை இல்லாதொழிக்க வேண்டும். தேசிய கீதமானது சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் சிங்களத்திலோ அல்லது தமிழிலோ அல்லது இரு மொழிகளிலுமோ பாடப்படல்வேண்டும்.
தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைப் புத்தகங்களினூடான நிலைப்பேறான நிகழ்ச்சிநிரலானது இல்லாதொழிக்கப்படல்வேண்டும்.. இலங்கையின் வரலாறானது பிரிவுசார் அல்லது வட்டாரம்சார் கோரிக்கைகளுக்குப் பணிந்திராதுஇ சர்வதேசத் தராதரங்களுக்கு அமைவாக சரியாக வரையப்படல்வேண்டும்

மாநில அரசாங்கத்துக்கு முழுமையான பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். சமஷ்டி கூட்டரசுக்குரிய பொலிஸானது மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் ஒழுங்கமைப்படுவதில் எவ்வித ஆட்சேபனையுமில்லை.
தீவிரவாதத் தடுப்பு (தற்காலிக) ஏற்பாடுகள் சட்டம் நீக்கப்பட்டு நாட்டின் பொதுவான குடியியல் சட்டமானது மீண்டும் கொண்டுவரப்படல்வேண்டும்.
புதிய அரசியலமைப்பு ஒழுங்குகள் இனம் மதம் மொழி கோட்பாடு சாதி மற்றும் பண்பாட்டைச் சார்ந்திராது சகல சமூகங்களுக்கிடையிலும் சமூக அக்கறையை உறுதிசெய்து தனிப்பட்ட பிரஜைகள் சட்டவிதிகளுக்கும் உரிமைகளுக்கும் சுயஉரிமைகளுக்கும் மதிப்பளித்தலை மேம்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகத்தின் நேரான இலட்சியங்களைத் தொடர வழி அமைக்கப்படவேண்டும்.

நவீன கண்காணிப்பு முறைகளின் காரணமாக போர் முடிவுற்றமையைத் தொடர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் இராணுவப்படைகளைக் கண்காணிப்புப் பணிகளுக்காக நிலைநிறுத்த வேண்டிய அவசியப்பாடானது தேவைக்கு மிகையானது.
முன்னாள் போராளிகளை பொது வாழ்க்கையினுள் மீளக் கொண்டு வருவதன் பொருட்டு படைக்குறைப்இ படைக்கலைப்பு மற்றும் மீளவொருங்கமைத்தல் செயன்முறையானது மேற்கொள்ளப்படல் வேண்டும்.

வடமாகாண சபை உருவாக்கிய இதற்கு தெற்கில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  தமிழ் ஈழத்தைப் பெறுவதற்கான முன்னோடி என சிங்களத் தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு சிங்களத் தலைவர்கள் ஒருபோதும்   இணங்க மாட்டார்கள். முஸ்லிம்களும் வடக்கு கிழக்கு இணைப்பை கடுமையாக எதிர்ப்பார்கள். கிழக்கு  மாகாணம் முஸ்லிம்களின் பிரதேசம் என்பதே அவர்களின் நிலைப்பாடு.

தமிழ் பேசும் மாநிலம் இருக்கக்கூடாது என்பது  பெரும்  பெரும் பான்மையான சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு. முஸ்லிம் தலைவர்களும் இதற்கு தூபமிடுவார்கள். தமிழில் தேசிய கீதம் படக்கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ள கடும் போக்காளர்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள். இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தி மொழியில் இருக்கிறது என வாதாடும்  சிங்களத் தலைவகள் அப்பாவியான சிங்கள மக்களை தவறாக வலி நடத்துகின்றனர்.
வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை விளைத்த வேண்டும், முன்னாள் போராளிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்  தீவிரவாதத் தடுப்பு (தற்காலிக) ஏற்பாடுகள் சட்டம் நீக்கப்பட்டு நாட்டின் பொதுவான குடியியல் சட்டமானது மீண்டும் கொண்டுவரப்படல்வேண்டும்போன்ற ஆலோசனைகளுக்கு  கடும் போக்காளர்கள்  எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்.
 வடமாகாண சபையின் ஆலோசனை ஏற்கப்பட்டால் நல்லிணக்கத்துக்கான பாதை திறக்கப்படும்.

வானதி
சுடர் ஒளி
ஏப்ரல் 13/ஏப்ரல்20




No comments: