Sunday, January 10, 2016

கூட்டணிக்குத் தயாராகும் ஜெயலலிதா; கருணாநிதி மகிழ்ச்சி ,வைகோ அதிர்ச்சி


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்  தனித்துப் போட்டியிட்டு பெரு வெற்றி பெற்றதுபோல தமிழக சட்டசபைத் தேர்தலிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்த ஜெயலலிதா தனது முடிவிலிருந்து பின்வாங்கி  உள்ளார். கண்ணுக்கெட்டிய  தூரத்தில் எதிரிகள் இல்லை என இறுமாப்புடன் பேசிய ஜெயலலிதா சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பேன் எனக் கூறியதால் தமிழக அரசியலில்  மாற்றம் ஏற்படும் சூழ்நிலை தோன்றியுள்ளது.
கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு முனைப்புக் காட்டிய வைகோ வும் அவரது சக தலைவர்களும் ஜெயலலிதாவின்  அறிவிப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் முடிவினால் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.ஜெயலலிதாவைத் தவிர மற்றைய அரசியல்தலைவர்கள் அனைவரும் இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டனர். ஒருசில  பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களும் விஜயகந்தைச்சென்று சந்தித்தனர். விஜயகாந்துக்கும் காங்கிரசுக்கும்  கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாது என்ற நிலையை மழை, வெள்ளம் மாற்றிவிட்டது. அசைக்க முடியோயாத தலைவி என்ற  மாயை உடைந்துவிட்டது. வெள்ளப் பதிப்பை uகையாள்வதில் தமிழக அரசு தோல்வியடைந்தது  அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அக்கட்சியின் அரசியல்  எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசியலில் கிடைத்த வெற்றிப் போதை  ஜெயலலிதாவை உச்சத்தில் வைத்தது. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது எதிரணிகளை அலட்சியமாகப்பார்த்தவர்  எதிரணிகளுக்கு அழைப்புவிடத்தயாராகிவிட்டர்.

அரசியல் கட்சிகளின் பொதுக்குழு வெறும் கண்துடைப்பு நாடகம்தான் என்பதை அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழக பொதுக்குழு  நிரூபித்துள்ளது. பெருமெடுப்பில் நடத்தி முடிக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழக பொதுக்குழுவில் சர்வ  அதிகாரமும் ஜெயலலிதாவுக்கு வ்ழங்கப்பட்டுள்ளது. அவரின் முடிவே கழகத்தின் முடிவு. பொதுக்குழுவில் முக்கிய முடிவுகளை ஜெயலலிதா வெளியிடுவர் என்று எதிர் பார்க்கப்பட்டது. சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பேன் என ஜெயலலிதா அறிவித்ததால் கழகத்தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஜெயலலிதாவை மிக மூர்க்கமாக எதிர்க்கும் விஜயகாந்த் அவருடன் சேர்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை.காங்கிரஸ் கட்சி  எட்டியும் பார்க்காது.  மாக்கிஸ்ட் கட்சி ஜெயலலிதாவை தூரத்தில் வைத்துள்ளது.  வைகோவை ஜெயலலிதா திரும்பியும்பார்ப்பதில்லை. விமர்சனங்களுக்கு மத்தியில் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்கள் ஜெயலலிதாவைச்சந்தித்து வருவதால் அக்கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகத்துடன் கூட்டணி சேரும் என்ற சந்தேகம் உறுதியாகி உள்ளது. கூட்டணி பற்றி இரண்டு கட்சிகளும் வாய்திறக்கவில்லை.
விஜயகாந்தின் வரவுக்காக மக்கள் நலக் கூட்டணி கதவை அகலத்திறத்து வைத்திருந்தது. யாரிடமும் பிடிகொடுக்காது நழுவும் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியையும் அந்தரத்தில் விட்டார். வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் விஜயகாந்தைச்சந்தித்து வருந்தி அழைத்தனர். கருணாநிதி,வைகோ,திருமாவளவன் போன்ற  அரசியல் தலைவர்கள் விஜயகாந்தை எதிர்பார்த்து காத்திருப்பது அரசியல்களத்தின் உச்சக்கட்டம். அரசியலின் நெளிவு சுழிவு தெரிந்தவர்கள் விஜயகாந்தின் அரசியலைப்புரிந்துகொள்ள முடியாது  தத்தளிக்கின்றனர்.
பிடிகொடாது காய் நகர்த்துவது விஜயகாந்தின் அரசியல் தந்திரம்.அதிக தொகுதிகளைப்பெறுவதற்காக  அவர் செய்யும் அரசியல் மாயம். மக்கள் நலக் கூட்டணியால் ஜெயலலிதா பலனடைவர் என்பதை விஜயகாந்த்  புரிந்துகொண்டார்..   மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் செல்லமாட்டார் என்பதை அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. இதனை  தாமதமாக புரிந்துகொண்ட  அக்கட்சித்தலைவர்கள் முதுபெரும் அரசியல் தலைவரான நல்லகண்ணுவை முதலமைச்சராக்க  முயற்சி செய்கின்றனர். முதலமைச்சர் வேட்பாளராக நல்லகண்ணுவை அறிவித்தால் வாக்கு சதவிகிதம் கூடுமேதவிர ஆட்சியைப்பிடிக்க முடியாது. வெற்றி பெறமுடியாது எனத்தெரிந்தால் திருமாவளவன் வெளியேறிவிடுவர்.
 திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன்  காங்கிரஸுசும் விஜயகாந்தும் இணையும்  சாத்தியம் உள்ளது.. இந்தக்கூட்டணியையே கருணாநிதி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் இளவல் ஸ்டாலினும் காங்கிரஸின் இளவல் ராகுலும் விரும்பாவிட்டாலும் இக்கூட்டணி அமைவதற்கான  களநிலை உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தை விழ்த்தும் சக்தி திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு உள்ளதென்பதை வாக்காளர்கள் துல்லியமாகப்புரிந்துகொண்டுள்ளனர். அரசியல் வாதிகள் தமது பலத்தை தவறாக  எடைபோட்டுள்ளனர்.
விஜயகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பித்தபோது அவருக்கு எட்டு சதவிகித வாக்கு கிடைத்தது. அடுத்த முதலமைச்சர் என்ற கோஷம் விண்ணைப் பிளக்க அரசியலுக்கு வந்த விஜயகாந்தால் எதிர்பார்த்த  வெற்றியைப் பெற முடியவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளின் வாக்குகளைப் பிரித்த விஜயகாந்து முன்றாவது இடத்தையே பிடித்தார். திராவிடக்கட்சிகளை அரசியலில் இருந்து விரட்டி அடிப்பேன் என்ற  உறுதி மொழியுடன்  அரசியலுக்கு வந்த  விஜயகாந்த் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் கட்டணி சேர்ந்து அரசியலில் மின்னினார்.
விஜயகாந்தை அரசியலின் உச்சத்துக்கு கொண்டு சென்ற ஜெயலலிதா அவரை  குப்புற  விழுத்தினர். தன்னை விழுத்திய ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என விஜயகாந்த் சபதம் எடுத்துள்ளார். ஆகையால் வெற்றிபெறும்  கூட்டணியைத்தான் விஜயகாந்த் தேர்ந்தெடுப்பர். ஜெயலலிதாவை விழ்த்தும் சக்தி கருணாநிதிக்கு உள்ளதென்பது இரகசியமானதல்ல.
திராவிட முன்னேற்றக் கழக‌ம்,விஜயகாந்த்,காங்கிரஸ் ஆகியன கூட்டணி  சேர்த்தல் திருமாவளவனும் மாக்சிஸ்த கட்சியும் அங்கே  செல்லும் நிலை  உள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் பக்கம் சென்றுவிடும்.கூட்டணிக் கடசித்தலைவர்கள் அனைவரும் வெளியேறினால்.வைகோ தனிமரமாகிவிடுவர்.    திராவிட முன்னேற்றக் கழக‌ம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஆகியவற்றை விழ்த்துவதற்காக கடந்த நாடாளுமன்றத்  தேர்தலின் போது பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையில்  மெகா கூட்டணி அமைந்தது. அக்  கூட்டணியால் ஜெயலலிதா அதிக அறுவடை செய்தார். கருணாநிதி கையில் இருந்ததையும் பறிகொடுத்தார். அப்படி ஒரு நிலை  வரக்கூடாது என கருணாநிதி விரும்புகிறார்  கூட்டணி பற்றிய சந்தேகங்கள் ஓரளவு சந்திக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள் வாய் திறந்து வெளிப்படையாக எதனையும் வெளியிடவில்லை.  

 தேர்தல் நெருங்குவதால் ஜெயலலிதா அடக்கி வசிக்கிறார். அவரது கட்சியஸ் சேர்ந்தவர்களின் அலளட்சியப் பேச்சு  அவரை சங்கடத்தில் விழ்த்தி உள்ளது.  தொலைக் கட்சிப் பேட்டியில்  நாஞ்சில் சம்பத்  கூறிய அலட்சியமான பதில்களால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.  .. வெள்ளப்பதிப்பு பற்றிய கேள்விக்கு அது 2015 இல் நடைபெற்றது இப்போ 2016 அதுபற்றிப பேசவேண்டியதில்லை. இறப்பு பற்றி கேட்டபோது யானை நடந்தால் எறும்புகள் சாகும் என்றார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேறியபோது அவருடன் சேர்ந்து வெளியேறியவர் நாஞ்சில் சம்பத்து. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரப் பீரங்கி வைகோவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். திடீரென அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். ஜெயலலிதா  அவருக்கு முக்கியத்துவம்  கொடுத்தார்.
ஜெயலலிதாக்கும்  அவரது மந்திரிகளுக்கும்  இருந்த செல்வாக்கு குறைந்துள்ளது. நாஞ்சில் சம்பத் போன்றவர்களின்  செயற்பாடு கட்சிக்கு அவப் பெயரைத் கொடுத்துள்ளது. தேர்தல் பற்றிய அறிவித்தல் வெளியானதும் இரகசிய பேரம் பேசல் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
10/01/16

    

No comments: