Sunday, January 18, 2015

உலககிண்ணப் போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் ட்ராவிட்

11-வது உலக கிண்ண  கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் அடுத்த மாதம் (பெப்ரவரி) 14ஆம் திகதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டியில் சமீபத்தில் செய்யப்பட்ட விதிமுறை மாற்றங்கள் உலக கிண்ணப் போட்டியில் முதல் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் உலக கிண்ணப்  போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் கப்டன் ட்ராவிட் இணைய தளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- 

புதிய விதிமுறையின் படி இன்னிங்சின் எல்லா ஓவர்களிலும் கண்டிப்பாக 5 பீல்டர்கள் 30 அடி வட்டத்துக்குள் நிற்க வேண்டும். முதல் 10 ஓவர்களில் 2 பீல்டர்கள் மட்டுமே 30 அடி உள்வட்டத்திற்கு வெளியில் நிற்க முடியும். 40 ஓவர்களுக்கு முன்பு பேட்டிங் அணி எடுக்கும் பவர்பிளேயின் போது 3 பீல்டர்கள் தான் 30 அடி உள்வட்டத்திற்கு வெளியில் நிற்கலாம். 

இதனால் ஆட்டவியூகத்தை அமைப்பது எல்லா அணிக்கும் சவாலானதாக இருக்கும். ஒரு இன்னிங்சில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்துவதும், ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருப்பதும் ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பு நிறைந்ததாக மாற்றும். இது கேப்டன்களுக்கு சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

5 பீல்டர்களை உள்வட்டத்துக்குள் நிறுத்தி விட்டு பகுதி நேர பவுலரை பயன்படுத்துவது கடினமான காரியமாகும். இதனால் 5 சிறப்பு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை வீழ்த்த தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 

பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தாவிட்டால் அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை வெற்றி இலக்காக எதிர்கொள்ள வேண்டியது வரும். இந்த போட்டி நீண்ட காலம் நடப்பதால் பிட்ச்சின் தன்மை மாறக்கூடும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் அனுகூலம் கிடைக்கும். 

No comments: