Wednesday, January 28, 2015

1983 உலகக்கோப்பையை பறித்த கபிலின்பிசாசுகள்

மூன்றாவது உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் கவாஸ்கர், கேப்டன் கபில்தேவ் தவிர்த்து மற்ற எல்லோருக்கும் முதல் அனுபவம். லண்டனை ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருந்தது. பக்கிங்காம் அரண்மனை, ஹைட் பூங்கா, டிரபால்கர் சதுக்கத்தை பார்த்து வாய் பிளந்து நின்றோம். ஆனால், கேப்டன் கபில்தேவின் சிந்தனை வேறாக இருந்தது. ஆங்கிலம், இந்தி இரண்டுமே அவருக்கு அப்போது அலர்ஜி. அடிக்கடி டீம் மீட்டிங் போட்டு, ‘களமிறங்குங்கள், வெற்றி பெறுங்கள் புலிகளேஎன்று எங்களை உசுப்பி விடுவார்... என்கிறார் ஆல் ரவுண்டர் சந்தீப் பட்டீல். கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்போடு, ஒரு பேட்டை தாதா போல இருமாப்புடன் வலம் வந்தது.அசுர பலம் வாய்ந்த அந்த அணியை வீழ்த்த முடியும் என்று எந்த அணிக்குமே நம்பிக்கை  இல்லை. அலட்சியமாக ஒதுக்கித்தள்ளக் கூடிய, கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லாத சாதாரண அணியாகவே இந்தியா இம்முறையும் பங்கேற்றது. கற்றுக்குட்டி அணியான ஜிம்பாப்வே தனது முதல் லீக் ஆட்டத்தில் (ஜூன் 9, நாட்டிங்காம்) ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்ததை பார்த்த பிறகுதான், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணம் இந்திய வீரர்களுக்கும் ஏற்பட்டது. 

அதே நாளில் நடந்த 4வது லீக் ஆட்டத்தில் இரண்டு முறை உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீசுடன் மோதிய இந்தியா, 34 ரன் வித்தியாசத்தில் வென்றபோது கூட அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா 60 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்தது. யஷ்பால் ஷர்மா 89, சந்தீப் பட்டீல் 36 ரன் எடுக்க, மற்ற வீரர்களும் கணிசமாக கை கொடுத்தனர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 54.1 ஓவரில் 228 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ரவி சாஸ்திரி, ரோஜர் பின்னி தலா 3 விக்கெட், மதன்லால், பல்விந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியாவுக்கு 4 புள்ளிகள் கிடைத்ததால் ரசிகர்கள் அரை இறுதி கனவு காண ஆரம்பித்தனர். ஜூன் 11ம் தேதி ஜிம்பாப்வே அணியுடன் நடந்த 2வது லீக் ஆட்டத்திலும் வெற்றி. ஜிம்பாப்வே 51.4 ஓவரில் 155 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 37.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்து தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தியது. அடுத்து ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசுடன் நடந்த ஆட்டங்களில் படுதோல்வி. பி பிரிவில் மீண்டும் ஜிம்பாப்வே அணியை 2வது முறையாக சந்தித்தது இந்திய அணி. டன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு, தொடக்க வீரர்கள் கவாஸ்கர், ஸ்ரீகாந்த் இருவரும் டக் அவுட் ஆகி சரிவை தொடங்கி வைத்தனர். அடுத்து வந்த மொகிந்தர் அமர்நாத் 5, யஷ்பால் ஷர்மா 9, சந்தீப் பட்டீல் 1 ரன்னில் அணிவகுக்க, 17 ரன்னுக்கு 5 விக்கெட் காலி! ஒட்டுமொத்தமாக 50 ரன்னாவது எடுப்பார்களா? என்பதே கேள்விக்குறியாக இருக்க, கேப்டன் கபில்தேவ் பேய்த்தனமாக ஆடினார். 

மறுமுனையில் பின்னி 22, சாஸ்திரி 1 ரன்னில் வெளியேற, இந்தியா 78 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார் கபில். மதன்லால் 17 ரன்னில் வெளியேற, சையது கிர்மானி பொறுப்புடன் கம்பெனி கொடுத்தார். ருத்தரதாண்டவத்தை தொடர்ந்த கபில், ஜிம்பாப்வே பந்துவீச்சை தவிடுபொடியாக்கினார். 60 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது. கபில் 175 ரன் (138 பந்து, 16 பவுண்டரி, 6 சிக்சர்), கிர்மானி 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 57 ஓவரில் 235 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. யாருமே நம்ப முடியாத வகையில் தனி ஆளாக வெற்றியை பறித்த கேப்டன் கபில்தேவின் ஆட்டம் கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்தது என்றால் மிகையல்ல.அதே உற்சாகத்தோடு கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 118 ரன் வித்தியாசத்தில் போட்டுத்தள்ளிய இந்தியா அரை இறுதியில் அடி வைத்தது. பந்துவீச்சில் மதன்லால், பின்னி தலா 4, பல்விந்தர் 2 விக்கெட் வீழ்த்தி தோள் கொடுத்தனர். ஜூன் 22ம் தேதி முதலாவது அரை இறுதி. மான்செஸ்டர் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா. டாசில் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 60 ஓவரில் 213 ரன்னுக்கு ஆல் அவுட். இந்தியா 54.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து கம்பீரமாக பைனலுக்கு முன்னேறியது.

கவாஸ்கர் 25, ஸ்ரீகாந்த் 19, அமர்நாத் 46, யஷ்பால் 61, சந்தீப் 51 ரன் விளாசினர். 2வது அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ரிச்சர்ட்ஸ் (80 ரன்), கோம்ஸ் (50 ரன்) இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர்.ஜூன் 25... லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி. ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், லேரி கோம்ஸ் என்று படிக்கும்போதே பயத்தில் மயக்கம் வரக்கூடிய அளவுக்கு அசுரத்தனமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா 54.4 ஓவரில் 183 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன உடனேயே, வெஸ்ட் இண்டீஸ் தான் மீண்டும் சாம்பியன் என்று எல்லோருமே முடிவுகட்டினர்.ஸ்ரீகாந்த் எடுத்த 38 ரன் தான் அதிகபட்சம். சந்தீப் 27, அமர்நாத் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்களால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. 60 ஓவரில் 184 ரன் எடுத்தால் ஹாட்ரிக் சாம்பியன் என்ற இலக்கோடு களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ். பல்விந்தர் சாந்து அதியற்புதமான இன் ஸ்விங்கர்போட்டு கார்டன் கிரீனிட்ஜை (1) வெளியேற்றினார்.

2வது விக்கெட்டுக்கு ஹெயின்சுடன் இணைந்த ரிச்சர்ட்ஸ் பவுண்டரியாக அடித்து நொறுக்க, இந்திய நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ஹெயின்ஸ் 13 ரன் எடுத்து மதன்லால் பந்துவீச்சில் பின்னியிடம் பிடிபட்டார். தனது அலட்சியமான ஆக்ரோஷ ஆட்டத்தை தொடர்ந்த ரிச்சர்ட்ஸ், மதன்லால் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கும் முனைப்புடன் ஓங்கி அடிக்க, மட்டையின் விளிம்பில் பட்ட பந்து மிட்&விக்கெட் திசையில் ராக்கெட் போல உயரே பறந்து படுவேகமாய் கீழிறங்கியது. என்னோட கேட்ச்... என்று வெறித்தனமாய் கத்தியபடி ஓடிய கபில், பந்தை பார்த்தபடியே சுமார் 100 அடி பின்னோக்கி ஓடி சர்வ சாதாரணமாகப் பிடிக்க, இந்திய அணியை மிரட்டிக் கொண்டிருந்த ரிச்சர்ட்ஸ் அவுட். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே கோம்ஸ் 5, கேப்டன் கிளைவ் லாயிட், பாக்கஸ் தலா 8 ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் 52 ஓவரில் 140 ரன்னுக்கு ஆல் அவுட். லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய ரசிகர்களின் வெள்ளத்தில் கபில்தேவும் சக வீரர்களும் மூழ்கினர். உலக கோப்பையை கபில் முத்தமிட்ட அந்த தருணத்தில், வெஸ்ட் இண்டீசின் சர்வாதிகார சாம்ராஜ்ஜியம் சரிந்து விழுந்தது.

* ரன் குவிப்பில் இங்க்ஜிலாந்தின் டேவிட் கோவர் 7 போட்டியில் 384 ரன் எடுத்து (அதிகம் 130, சராசரி 84.95) முதலிடம் பிடித்தார். ரிச்சர்ட்ஸ் 367 ரன்னுடன் (8 போட்டி, அதிகம் 119, சராசரி 73.40) 2வது இடமும், இந்திய அணி கேப்டன் கபில்தேவ் 303 ரன்னுடன் (8 போட்டி, அதிகம் 175*, சராசரி 60.60) 5வது இடமும் பிடித்தனர்.
* ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில் விளாசிய 175* ரன் அதிகபட்சமாக அமைந்தது.
* பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 60 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்தது அதிகபட்ச ஸ்கோராகும்.

* விக்கெட் வேட்டையில் இந்தியாவின் ரோஜர் பின்னி 8 போட்டியில் 18 விக்கெட் வீழ்த்தி முதலிடம் பிடித்தார் (சிறப்பு: 4/29). மதன் லால் 8 
போட்டியில் 17 விக்கெட்டுடன் (சிறப்பு: 4/20) 3வது இடம் பிடித்தார்.


நன்றி.தினகரன்

No comments: