Friday, April 3, 2009

திரைக்குவராதசங்கதி 7


தமிழ்த் திரை உலகை தனது வசியத்தால் கட்டி வைத்திருந்தவர் ரி.ஆர். ராஜகுகுமாரி, திரைப்படங்களில் நடிப்பவர்களைக் காண்பதற்கு இன்று ரசிகர்பட்டாளம் காத்துக் கிடப்பதைப் போன்றே அன்றைய ரசிர்களும் காத்திருந்தார்கள். தனது அபிமான நடிகையான எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை பார்ப்பதற்கு கடற்கரைக்கு சென்று வந்தார் ரி.ஆர். ராஜகுமாரி.
தியாக பூமி படத்தைப் பார்த்து பரவசமடைந்த ரி.ஆர். ராஜகுமாரி தனது தம்பியுடன் மெரீனா கடற்கரைக்குச் சென்று எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை காண தவமிருந்தார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் இயக்குநர் கே. சுப்பிரமணியமும் திறந்த காரில் செல்லும்போது தூரத்தில் நின்று பார்த்து ரசித்த ரி.ஆர்.ராஜகுமாரி நானும் ஒருநாள் நடிகையாவேன். என்னைப் பார்ப்பத
ற்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தவமிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவில்லை.
குமார குலோத்துங்கன் என்ற படத்தில் நடிப்பதற்கு ரி.ஆர். ராஜகுமாரி தெரிவு செய்யப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ராஜலட்சுமி என்பதே ரி.ஆர். ராஜகுமாரியின் நிஜப் பெயர். ராஜாயி என்றும் அழைப்பார்கள். டி.பி. ராஜலட்சுமி எனும் நடிகை பிரபலமாகயிருந்தபோது டி.வி. ராஜலட்சுமி என்ற பெயரில் இன்னொரு நடிகை பிரபலமாக இருந்தார். பெயர் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக டி.ஆர். ராஜலக்ஷ்மி எனும் பெயரை ராஜகுமாரி என்று மாற்றினார் தயாரிப்பாளர் ராதா ராவ்
ராஜலக்ஷ்மி எனும் பெயர் மறைந்து ரி.ஆர். ராஜகுமாரி எனும் பெயர் பிரபலமாகியது.
எம்.கே. தியாகராஜ பாகவதர் பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் நடித்து தனது நடிப்பாற்றலால் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியவர் ரி.ஆர். ராஜகுமாரி.
ரி.ஆர். ராஜகுமாரி முதன் முதலாக நடித்த குமார குலோத்துங்கன் வெளிவரவில்லை. ரி.ஆர். ராஜகுமாரி நடித்த கச்சதேவயானி வெளியாகி அவருக்கு பெரும் மதிப்பை தேடிக் கொடுத்தது. கே. சுப்பிரமணியம் இயக்கிய இப்படத்தில் கொத்தமங்கலம் சீனுவும் கொத்தமங்கலம் சுப்புவும் ரி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்தார்கள். அதன் பின்னர் வெளியான சூரிய புத்திரி, மந்திரவாதி ஆகிய படங்களும் ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிரமாண்டமான வெற்றிப் படமான ஹரிதாஸ், சிவகவி ஆகியவற்றில் டி. ஆர். ராஜகுமாரி நடித்தார்.எம்.கே. தியாகராஜ பாகவதருடன் போட்டிபோட்டு நடித்த பி.யூ. சின்னப்பாவுடனும் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார். மனோன்மணி, கிருஷ்ணபக்தி ஆகியவற்றில் பி.யூ. சின்னப்பாவுடன் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பிலும் பாட்டிலும் புகழ்பெற்று விளங்கினார். பியூ. சின்னப்பா வசனம், கத்திச் சண்டை, சிலம்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் பியூ. சின்னப்பா ஆகிய இரு பெரும் நடிகர்களுடன் நடித்த ரி.ஆர்.ராஜகுமாரி மக்கள் திலகம் எம். ஜி.ஆர்., நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருடனும் நடித்துள்ளார்.
எம்.ஜி. ஆரின் "புதுமைப் பித்தன்' ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்த படங்களில் ஒன்று.
தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய படங்களில் ஒன்றான மனோகராவில் சிவாஜி கண்ணம்பா ஆகியோருடன் போட்டி போட்டு நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
நடிப்பு, நாட்டியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ரி.ஆர். ராஜகுமாரியை அகில இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தவர் ஜெமினி ஸ்ரூடியோ நிறுவுனர் எஸ்.எஸ்.வாசன் தமிழிலும் ஹிந்தியிலும் புரட்சியை ஏற்படுத்திய சந்திரலேகாவில் ரி.ஆர். ராஜகுமாரியின் நடிப்பை புகழ்ந்தவர்களே இல்லை.
தமிழ்த்திரை உலகின் பொற்காலம் என்று தான் நடித்த காலத்தை பெருமையுடன் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.
அப்பொழுதெல்லாம் படப்பிடிப்புக்கு போய் வருவதென்பது கிட்டதட்ட பள்ளிக்கூடம் போய் வருவது போலத்தான். காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பினால் மாலையில் தான் வீடு திரும்புவேன். எல்லாக் கம்பனிகளிலும் ஒரே குடும்பத்தினர் போன்றுதான் பழகுவோம். டைரக்டர், நடிகர், வசனகர்த்தா, கமேராக்காரர்கள், லைட் போய் என்ற பாகுபாடே கிடையாது. சாப்பாட்டின் போது டைரக்டர் சுப்பிரமணியத்தின் அருகில் லைட்போய் உட்கார்ந்து சாப்பிடுவார். அந்தளவுக்கு சமத்துவம் வழங்கப்பட்ட பொற்காலம் அது என்று தனது திரைப்பட அனுபவத்தைக் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.
ரமணி
மித்திரன் 03/04/2009

1 comment:

ttpian said...

உண்மை சுடும்...
தமிழ்நாட்டு அரசியல்வாதிகல்,தேர்தல் திருவிழாவுக்கு போஇவிட்டார்கள்
எங்கலைபோல சிலர் புலம்புகிறோம்